search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ்கள்"

    • சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 2 வாரமாக அதிகரித்து வருகிறது
    • மே தொடக்கத்தில் அரசு பஸ்களில் முன்பதிவு தினமும் 10 ஆயிரம், 15 ஆயிரம் என இருந்த நிலையில் தற்போது 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 2 வாரமாக அதிகரித்து வருகிறது. வழக்கமான கோடை காலத்தை விட இந்த ஆண்டு பஸ் பயணம் அதிக அளவில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மே தொடக்கத்தில் அரசு பஸ்களில் முன்பதிவு தினமும் 10 ஆயிரம், 15 ஆயிரம் என இருந்த நிலையில் தற்போது 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்கின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பஸ்களும் இந்த மாதம் இறுதிவரை நிரம்பி விட்டன. இதேபோல தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், மதுரை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு திரும்பும் முன்பதிவு அதிகம் செய்யப்பட்டுள்ளது.

    • மதுரையில் அரசு பஸ்களின் அவலநிலையால் பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • சாதாரண கட்டண ேபருந்தை அதிகளவில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மதுரை

    தென் மாவட்டங்களில் முக்கிய நகரமாக விளங்கும் மதுரைக்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் செல்ல போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை.

    இதேபோல் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் அரசு பஸ்சில் வந்து செல்கின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தற்போது பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள், பெண்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.

    மதுரையில் இருந்து இயக்கப்படும் பல டவுன் பஸ்களில் ஓட்டை, உடைசல் மற்றும் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 60 சதவீத பஸ்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இருந்த போதிலும் அந்த பஸ்களிலும் பயணிகள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ்களில் 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கின்றன.

    ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ரூ.5, 6, 9, 13, 15 என்று 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கிறது. இதனால் குறைந்த கட்டண பஸ்களில் ஏற வரும் பயணிகள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் உள்ள பஸ்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த கட்டணம் ஷேர் ஆட்டோ கட்டணத்துக்கு நிகராக உள்ளதால் தினமும் போக்குவரத்துக்காக அதி களவு செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுதான பஸ்களை இயக்குவதை கைவிட வேண்டும். புதிய பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகின்றனர்.

    பெரும்பாலான டவுன் பஸ்கள் பயணிகளுக்கு போக்கு காட்டிவிட்டு பல நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுவிடுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் உள்ளது. மேலும் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவர் கள் அவசரப்பட்டு பஸ் களை இயக்குவதாக கூறப்படுகிறது.

    தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்வதைபோல் அரசு பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மாணவ-மாணவிகளை, பெண்களை ஏற்றாமல் போக்குகாட்டி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் நிலை உள்ளது.

    மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மகளிர், மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். அவைகள் காலை, மாலை நேரங்க ளில் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

    • சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையில் மீண்டும் சென்னை திரும்புவார்கள்.
    • அனைத்து போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் சென்னைக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாளையுடன் முடிகிறது. 2-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

    பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இன்று இரவு புத்தாண்டை கொண்டாடி விட்டு நாளை (1-ந்தேதி) வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புகிறார்கள். 9 நாட்கள் விடுமுறை முடிந்து பெரும்பாலானவர்கள் நாளை சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு பயணம் செய்வார்கள்.

    இதனால் பஸ், ரெயில்களில் இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக தென் மாவட்டப் பகுதியில் இருந்து வரும் ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.

    மக்களின் தேவை அதிகரித்ததால் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆம்னி பஸ்கள் நிரம்பி விட்டன. இதையடுத்து அரசு சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

    திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு நாளை 500 சிறப்பு பஸ்களும், திங்கட்கிழமை 300 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    வெளியூர்களில் இருந்து வழக்கமாக சென்னைக்கு 2,100 பஸ்கள் இயக்கப்படும். பொதுமக்கள் தேவையைக் கருதி கூடுதலாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையில் மீண்டும் சென்னை திரும்புவார்கள். அதன் அடிப்படையில் அனைத்து போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் சென்னைக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பி விட்டதால் இன்று முதல் திங்கட்கிழமை வரை பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இன்று பயணம் செய்ய 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப மட்டும் 12 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

    நாளைய பயணத்திற்கு 22 ஆயிரம் பேரும், 2-ந்தேதிக்கு 10 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவது போல இங்கிருந்தும் பலர் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர். அதனால் இன்று முதல் 3 நாட்கள் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மதுரை நகரில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் 3 பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • பொதுமக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்கள் குறிப்பிடத்தக்கவை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும் பெங்களூரு, ஆந்திரா சென்னை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதேபோல ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், கொடைக்கானல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய 2 பேருந்து நிலையங்கள், 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். அங்கு பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.

    மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் தவிர 10-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்கள் உண்டு. இங்கு இருந்து நகர் மற்றும் கிராமங்களுக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது கிராமப்புறங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

    மதுரை மாநகர பஸ் நிலையங்களில் பனகல் சாலை, கே.புதூர் மற்றும் ஆனையூர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இங்கு இருந்து நாள்தோறும் சுழற்சி அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இங்கு தற்போது மிகக் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அங்கு பொதுமக்கள் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    அண்ணா பஸ் நிலையம், கே.புதூர் மற்றும் ஆனையூர் ஆகிய 3 பஸ் நிலையங்களில் பொதுமக்களின் வருகை குறைவு காரணமாக, அவை உரிய முறையில் பராமரிக்கப்படுவது இல்லை. எனவே மேற்கண்ட பஸ் நிலையங்கள் பராமரிப்பு இன்றி சீர்குலைந்து காட்சி அளிக்கின்றன. அங்கு மினி பஸ்களையே அதிகம் பார்க்க முடிகிறது.

    தல்லாகுளம் பனகல் சாலையில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இது மதுரை அரசு மருத்துவமனைக்கு மிகவும் அருகில் உள்ளது. இதனால் வெளியூர் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இந்த பஸ் நிலையம் பயனுள்ளதாக இருந்தது.

    எனவே அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இங்கு தற்போது 5-க்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் மினி பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோ மூலம் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது.

    மதுரை அழகர் கோவில் சாலையில் கே.புதூர் பஸ் நிலையம் உள்ளது. இங்கு இருந்து மேலூர், அழகர் கோவில் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு 15-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இங்கு தற்போது 5-க்கும் குறைவான பஸ்களை புறப்பட்டு செல்கின்றன.

    ஆனையூர் பஸ் நிலையத்தில் இருந்தும் திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி உள்ளிட்ட புறநகரங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது அங்கு இருந்து 5 பேருந்துகள் புறப்பட்டு போனால் அதிர்ஷ்டம் என்ற நிலை தான் உள்ளது. ஆனையூரில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கின்றன. இதற்கான கட்டுமான பொருட்களை சேகரித்து வைக்கும் தளமாக ஆனையூர் பஸ் நிலையம் மாறி உள்ளது.

    மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதுவும் தவிர உபரி பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

    எனவே மேற்கண்ட 3 பஸ் நிலையங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது குறைந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

    • மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
    • நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் திருப்பூா் மாநகராட்சி 3வது மண்டல மாநாடு ஏஐடியூசி. சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம் வருமாறு:-திருப்பூா் மாநகராட்சி பகுதியில் நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளிலும் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்.

    அதேபோல வாா்டில் ஒரு இடத்திலாவது நூலகம் அமைக்க வேண்டும். மாநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு மாநகர பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகை இல்லாததால் 20 கண்டக்டர்களுக்கு மெமோ கொடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
    • ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக வணிக பிரிவு மேலாளர் செல்வகுமார் தலைமையில் பயண சீட்டு பரிசோதகர்கள் கடந்த 12-ந்தேதி காலை 5.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. மழை நீர் ஒழுகுகிறது. டிஜிட்டல் போர் பிட்டிங் செய்யவில்லை. வழிதட எண், ஊர் பெயர் கையால் எழுதப்பட்டுள்ளது உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 20 பஸ்களின் கண்டக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது.

    அதிகாரிகளின் இந்த நடவடிக்கை டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் பஸ் நிறுத்தங்களில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கின்றன.
    • இதனால் பெண்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தின் 16 பணிமனைகளில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக 960 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 125-க்கும் மேற்பட்டவை பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள் ஆகும். மாணவ- மாணவிகள் உரிய அடையாள அட்டையுடன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய இயலும்.

    மதுரை மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக 635 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இங்கு பஸ்களை கட்டாயம் நிறுத்திச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் இது கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது;-

    பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் அதிகாலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் பஸ் நிறுத்தத்தில் கால் கடுக்க காத்து இருக்கின்ற னர். ஆனாலும் அங்கீக ரிக்கப்பட்ட நிறுத்தங்களில் பெரும்பாலும் பஸ்கள் நிற்பது இல்லை. பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற பிறகு தான் நிறுத்தப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவி கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிப் போய் தான் பஸ்களில் ஏறி பயணம் செய்ய முடிகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள், பஸ் நிறுத்தங்களில் நிற்பதே இல்லை.

    பஸ் நிறுத்தங்களில் காத்து இருப்பவர்கள், காசு கொடுத்து பயணிக்கட்டும் என்று டிரைவர், கண்டக்டர்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் பெரும்பாலும் பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்துவது இல்லை. எனவே மாணவிகள் நிறுத்தம் தாண்டி நிற்கும் பஸ்களில் ஓடிச்சென்று ஏறி பயணம் செல்வதை பார்க்க முடிகிறது. மதுரை மாநகர பஸ்சில் பயணித்த சிறுவன் ஒருவன், கடந்த சில மாதத்துக்கு முன்பு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    எனவே மதுரை மாநகரில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அப்படி செய்தால் அரசு பஸ்களில் கூட்டம் அலை மோதுவது குறையும்.

    குறிப்பாக காளவாசல் பஸ் நிறுத்தம் உள்ள பகுதியில் எந்த பஸ்களை யும் முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க செய்வது இல்லை. கண்ட இடத்தில் பஸ்களை நடுவழியில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    காளவாசல் சிக்னல் பகுதி முக்கிய சந்திப்பாக இருப்பதால் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வு காண்பதை விட்டு விட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆம்புலன்சு வாகனங்கள் அதிக நேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறது.

    அடுத்தபடியாக இலவச பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம், ஒரு சில கண்டக்டர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அசிங்கமாக பேசுகின்றனர். பள்ளிக்கூட மாணவ- மாணவிகளை தரக்குறை வாக பேசுகின்றனர். ஆனா லும் இதனை சகித்துக் கொண்டு பொதுமக்கள் வேறு வழியின்றி அரசு பஸ்களில் பயணம் செய் வதை பார்க்க முடிகிறது.

    ஆரப்பாளையத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்ற கல்லூரி மாணவி ஒருவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்து கைதான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

    எனவே அரசு பஸ்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சுய ஒழுங்கை கடைப்பிடிப்பது அவசியம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இது தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக வட்டாரத்தில் கூறியதாவது:-

    அரசு பஸ்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும் என்று டிரைவர்- கண்டக்டர்களுக்கு அறி வுறுத்தி உள்ளோம். பயணிகளிடம் கனிவாக பேசும் படியும் வலியுறுத்தி வருகிறோம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை- மாலை நேரங்களில் கூடுத லாக பஸ்கள் இயக்கப்படு கின்றன. பள்ளிகூட மாணவ-மாணவிகளுக்கு தனியாக பஸ் இயக்குவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    • தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 4,218 சிறப்பு பஸ்களும் சேர்த்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக 16,888 சிறப்பு பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 4,218 சிறப்பு பஸ்களும் சேர்த்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களுக்கான இருக்கை முழுவதும் நிரம்பி விட்டன. இதனால் பிற போக்குவரத்து கழக பஸ்களுக்கு தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரையில் 3 நாட்களுக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து பயணத்திற்கு காத்து இருக்கின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவு முன்பதிவு நடந்து வருகிறது. மக்கள் ஆன்லைன் வழியாக விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

    வருகிற 21, 22, 23 ஆகிய நாட்களுக்கு அரசு பஸ்களில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களில் எல்லா இருக்கைகளும் நிரம்பி விட்டதால் மக்கள் பயணத்தை வேறு தேதிக்கு மாற்றி வருகிறார்கள். ஆம்னி பஸ்களில் மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய விரும்பாததால் 20-ந்தேதி (வியாழக்கிழமை) பயணத்திற்கு முன்பதிவு செய்கின்றனர்.

    குடும்பத்தோடு ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை ஆவதால் அரசு பஸ்களில் குறைவான கட்டணத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அரசு பஸ்களை நோக்கி மக்கள் வருவதை அறிந்து போக்குவரத்து கழகங்கள் ஒருநாள் முன்னதாக புறப்படும் வகையில் முன்பதிவை தொடங்கி உள்ளது.

    தீபாவளிக்கு 4 நாட்கள் முன்பே சொந்த ஊர் புறப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 20-ந்தேதி பயணத்திற்கு மக்கள் அதிகளவில் தற்போது முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இதுவரையில் 20 ஆயிரம் பேர் வியாழக்கிழமை பயணத்திற்கு முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    சென்னை மற்றும் பிறநகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. முன்பதிவு 2 மடங்கு அதிகரித்து உள்ளது. அதனால் பயணத்தை மேலும் ஒருநாள் முன்னதாக தள்ளி 20-ந்தேதிக்கு புறப்படுகிறார்கள்.

    சென்னையில் இருந்து 20-ந்தேதி செல்ல 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பண்டிகை முடிந்து சென்னை திரும்பவும் முன்பதிவு விறுவிறுப்பாக உள்ளது. 25, 26-ந்தேதி வரை முன்பதிவு செய்யப்படுகிறது.

    விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் விழுப்புரம், சேலம்,கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் உள்ள பஸ்களுக்கு தற்போது முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    • கடந்த 2 வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு பஸ் பயணம் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட வெளியூரில் உள்ள மக்கள் விரும்புவார்கள்.

    சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்து தயாராக உள்ளனர்.

    சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடிச் செல்கிறார்கள். அரசு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தொடங்கியது.

    தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு 21-ந்தேதியே (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    அரசு விரைவு பஸ்களில் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் ஆம்னி பஸ்களிலும் புக்கிங் செய்து வருகின்றனர்.

    ரெயிலில் இடம் கிடைக்காத சாமான்ய மக்கள் அரசு சிறப்பு பஸ்களை எதிர் பார்த்து கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்பதிவு அரசு பஸ்களில் 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 21-ந்தேதி பயணம் செய்ய 23 ஆயிரம் பேரும், 22-ந்தேதிக்கு 21 ஆயிரம் பேரும், 23-ந்தேதிக்கு 4 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இன்று இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது-

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2 வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு பஸ் பயணம் அதிகரித்துள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகின்றார்.

    வழக்கம் போல தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த ஆண்டு கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு 10-ந்தேதி வெளியாகும்.

    முதல் கட்டமாக 450 அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு நடந்து வருகிறது. இதில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல மட்டும் 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 25-ந்தேதிக்கு 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
    • தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ. ராசா இந்துக்களை குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும் புதுவையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பினையொட்டி பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை முதலே பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், மருத்துவமனைகளுக்கு மற்றும் இதர வேலைகளுக்கு செல்வதற்கு ஏராளமானோர் தினந்தோறும் தனியார் பஸ்களில் சென்று வந்தனர். இன்று நடந்த போராட்டத்தை முன்னிட்டு கடலூரில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு தனியார் பஸ்கள் எதுவும் இன்று செல்லவில்லை. அரசு பஸ்கள் மட்டும் இன்று இயங்கின. காலை முதலே ஓரளவு அரசு பஸ்கள் மட்டும் இயங்கி வந்த நிலையில் தனியார் பஸ்கள் எதுவும் இயங்காததால் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கூடுதலாக 10 அரசு பஸ்கள் அதிகாரிகளால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டது. இதனால் பயணிகளின் கூட்டம் அலைமோதாமல் பாதுகாப்பான முறையில் பஸ்களில் பயணம் செய்தனர். மேலும் இந்த அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி சென்று வந்தது குறிப்பிடுத்தக்கது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.

    • திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • திருச்சி மாவட்டத்தில் 438 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசு பஸ்களை முறையாக பராமரிக்காததே காரணம் என டிரைவர்கள் தரப்பில் குற்றச்சாட்டப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்திற்கு திருச்சியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் டிரைவர் கூறுகையில், தமிழக அரசு டவுன் பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என அறிவித்துள்ளது. இந்த டிக்கெட் கட்டணத்திற்கான மானியத்தை போக்குவரத்துக் கழகத்திற்கு முறையாக வழங்கவில்லை. இதனால் சீராக பஸ்கள் பராமரிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் நாங்கள் எங்கள் சொந்த பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது.

    இதுபற்றி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் 438 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் தமிழக அரசின் இலவச கட்டணத்துக்குள் வருகிறது. தினமும் ரூ.13 ஆயிரம் வசூல் செய்த பஸ்ஸில் தற்போது ரூ.3000 கூட வசூல் ஆகவில்லை.

    டிரைவர், கண்டக்டர்கள் விடுமுறை இல்லாமல் இரண்டு ஷிப்ட் தொடர்ச்சியாக பணியாற்ற நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதுவும் விபத்துக்கு காரணமாக இருக்கிறது. எனவே தமிழக அரசு அரசு போக்குவரத்து கழக செயல்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    இதுபற்றி திருச்சி அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, டிரைவர்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவது நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அரசு பஸ்கள் வழக்கம் போல் சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. உபகரணங்களும் அவ்வப்போது மாற்றப்படுகின்றன என்றார்.

    • மதியநேரத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மாறுவதால் சில அரசுபஸ்கள் இடைநிறுத்தம் செய்கிறது.
    • நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை. இதை நம்பி காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    உடன்குடி:

    ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், மெஞ்ஞானபுரம் வழியாக உடன்குடிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் அதிகமான மக்கள் பயணம் செய்கிறார்கள்.

    உடன்குடி, மெஞ்ஞானபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதி உள்ள 100-க்கு மேற்பட்ட கிராம மக்கள்நெல்லைக்கு செல்லும்போதும் நெல்லை, பாளை, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து உடன்குடி பகுதிக்கு வருபவர்களும் இந்த வழித்தடத்தை தான் அதிகமாக விரும்புகின்றனர்.

    அதனால் நெல்லையில் இருந்து உடன்குடிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தவறாமல் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் மதியநேரத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மாறுவதால் சில அரசுபஸ்கள் இடைநிறுத்தம் செய்கிறது. உடன்குடியில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீவை குண்டத்தில் திரும்புகிறது.

    நெல்லையில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீவைகுண்டத்தில் திரும்புகிறது. இதனால் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நண்பகல் 12.30-க்கு உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை. இதை நம்பி காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதனால் மதிய நேரத்தில் சுமார் 3 மணி நேரம் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலை உருவாகிறது. இதனால் மதிய நேரத்தில் முறையாக அரசு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இது பற்றி பயணி ஒருவர் கூறியதாவது, கட் சர்வீஸ் என்ற பெயரில் சுமார் 3 மணி நேரம் நெல்லை -உடன்குடிக்கு பஸ் போக்குவரத்தினை தடை செய்தால் உடன்குடியில் பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் பயணிகள் சார்பில் நடைபெறும் என்றார்.

    ×